Sunday, October 14, 2007

மனமெங்கும் மகனாட

அன்பின் நெஞ்சங்களே எமது மகன் தனது நான்காவது ஆண்டு மருத்துவ பயிற்சிக்காகச் சமீபத்தில் வாஷிங்டன் சென்றுவிட்டான், இம்முறை அவனது பிறந்த தினத்தில்தான் நானும், அவன் அன்னையும் அவனைப் பிரிந்து இருந்த முதலாவது பிறந்ததினம். அப்போது மனதில் எழுந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சந்தர்ப்பம் அளித்தமைக்கு அன்பான வணக்கங்கள்

மனதிலொரு கவிதை
மைந்தனுனைத் தேடி

ஆசை மகனுன்னை
ஆகாயவிமானமது
அழைத்துச் சென்றெமக்கு
அளித்த தனிமை தந்த
அன்புத் தண்டனையால்
பாடும் கவிதையிது

தாலாட்டு உனக்கு
தாய்பாடும் பருவமல்ல
தந்தை மனிதிலின்று
தவழுகின்ற கானமிது

செல்வமகன் நீயும்
சென்றாய் அமேரிக்காவுக்கு
கல்வி வளம் அதனை
கட்டிக் காப்பதற்கு
வாரங்கள் எட்டேதான்
மகனே பிரிந்திருக்கும் காலமிது
பாழும் மனம் அதுவோ
பாவம் அழுகிறது

அன்னை வாயில்
உதிர்க்கும்
வார்த்தையெல்லாம்
அன்புமகன் உந்தன்
ஆசைக் கனவுகளே
உன்னைப்பிரிந்து வாடும்
உள்ளங்கள் இரண்டு
தனிமைக்கூட்டில் நாம்
தவிக்கும் பொழுதுகள்

பிறந்தநாள் வந்தது மகனே - நீ
பிறந்ததுமுதல் இந்நாள்வரை நாம்
பிரிந்து இருந்ததில்லை அறிவாய்
பாவம் அன்னையவள்
பதைத்து இருந்தநிலை
பார்த்து தந்தை இவன்
மறைந்து வருந்தும் கலை

உனைப்பிரிந்த துன்பம் தனை
உனைப்பெற்ற பெற்றோர் நாம்
தாங்கும் வகைசொல்வேன் கேளாய் ...

நாம் பெற்ற செல்வம்
நலமாகப் பயின்று
நானிலத்தில் தலைசிறந்த
நல்லதொரு மருத்துவனாகி
மக்களுக்கு சேவை செய்து
மனிதாபிமானம் மிக்க
மருத்துவன் இவன் என
மண்ணுலகம் போற்ற வேண்டும்

அன்று
அன்னை அவள் மனமும்
தந்தை என் மனமும்
விண்ணுலகம் வரை உயர்ந்து
விம்மிப்புடைத்து நிற்கும்
அந்நாள் வரை எமைக்காக்க
ஆண்டவன்
அருள் வேண்டும்

1 comment:

rahini said...

makan sukamaa? kavithai alavaiththau