என்னைத் தேடும் எனது கவிதை
எனக்குள்ளே நானே
உருமாறிப் போனேனோ ?
எனைத் தேடும் கவிதைகள்
என்னோடு மோதும்
சிலகாலம் கண்ணீரில்
சிலகாலம் பன்னீரில்
எதிர்காலம் எந்நீரில்
எனை மூடும் மழைநீரில்
சிந்தித்த பொழுதெல்லாம்
சிறையான நிமிடங்கள்
விடைகாணும் பொழுதினிலே
உடைந்து போன வடிவங்கள்
தத்தளிக்கும் ஆழ்கடலோ
தடுமாறும் புதைசேறோ
விதைத்து விட்ட வினைகள்
விளைச்சல் காணும் வேளையிது
அடிபட்ட மனமெங்கும்
ஆழப்பதிந்த காயங்கள்
ஆறாத வடுக்களெல்லாம்
ஆறிப்போன உணர்ச்சிகளே
திசைமாறிப் பறந்த கிளி
திக்குத்தெரியாத காட்டினிலே
அண்ணாந்து பார்க்கும் வேடனுக்கு
அனைத்தும் ஒரு குறிதானே !
விளக்கமில்லா விசனங்கள்
விளைந்து வரும் நெஞ்சினிலே
எனைத்தேடும் கவிதைகள்
என்னோடு மோதுமம்மா
சக்தி சக்திதாசன்
