நிசப்தமான பொழுதினிலே
நீண்டதொரு மாலையிலே
நிம்மதியான ராகங்களோடு - என்
நினைவுகளில் சங்கீதம்
பாதங்களில் கொலுசோடு
பாவடைத் தாவணியில்
பாவையவள் பவனியையே
பார்த்த ஞாபகங்கள்
காதலென்னும் தென்றல்
வாலிபத்தின் சோலையிலே
வாசத்தோடு வீசிய பொழுது
வாடாமல் தூங்குது மனதில்
சிந்திக்கும் வயதல்ல அது
சிந்தையிலே தேனூறும்
சிங்கார வேளையிலே
சித்திரமாய் உறைந்தவள்
ஓடிவிட்ட காலங்கள்
ஓய்ந்து விட்ட வேளையில்
ஒருகண நிகழ்வுகளாய்
ஓவியமாக ஒய்யாரமாய்....
உருண்டோடும் ஜகத்தினில்
உள்ளோர்கள் மனங்களில்
உன்னதப் பொழுதொன்று
உறங்குவது உண்மையே
மூங்கிலின் துகள்களில்
விளையாடும் தென்றலோ
நினைவுகளில் தவழ்ந்திடும்
வாலிபத்து வர்ணங்கள் ?
உருவங்கள் மாறலாம்
உள்ளங்கள் முதிரலாம்
கடந்தகால நினைவுகள்
நிழலாக மறையுமோ ?
ஏதோ ஒரு ஓரத்தில்
எங்கோ ஒரு மூலையில்
இசைக்கும் ராகங்கள்
அவை நினைவின் சங்கீதங்கள்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
