உன்னை இன்று மட்டும்
நினைக்கவில்லை
பாரதமாதாவின் மடியினில்
தவழ்ந்த
தமிழன்னையின்
மூத்த புதல்வனே !
மறந்தால்தானே நினைப்பதற்கு ....
தமிழ்மணக்கும் பாக்களிலே
தனைக் கலந்து தந்தவனே !
தாய் தந்த மொழியதற்கு
தரம் தந்த தூயவனே !
சொல்லும் தமிழே !
பாரதியுந்தன் செயலும் தமிழாய் !
அமைந்தோனே
செல்வம் தேடும் உலகினிலே
செழிப்பைக் கண்டாய் மொழியினிலே
சிரித்த சமூகத்தைப் பார்த்துச்
சிரித்த தமிழ்ச் சிங்கம் நீ
சீரிய அறிவெனும் கூரியவாளால்
சிந்தையை மறைத்த மடமையை
சிதைத்த செந்தணல் கவிஞன் நீ....
தாயின் கைகளில் விலங்கு கண்டு
தமிழாய்க் கொதித்து எழுந்தே நீ
தளைகள் அறுக்கப் புறப்படுவீர் என
தமிழ்மேல் ஆணையிட்டவன் நீயே
நிஜத்தைக் கலந்து கவிதையுடன்
நிதமும் படைத்தாய் பாவலனே
நீசர் பலரும் அலறி ஓட காவலனே !
நீறுபூத்த நெருப்பாய் தகித்தாய்
அன்றொருநாள் கூடினர் அவர்கள்
ஆகாயத்தில்
அவசரக்கூட்டம்.
தமிழின் மைந்தன் பாக்கள்
அவையினில் நிறைய
வரமே கேட்டனர்
அதனால் தானோ மகாகவியுன்னை
அகவை நாலுபத்தும் நிறையா நிலையில்
ஆண்டவன் ஆணையிட்டே
தன்னுடன் அழைத்தான் சொல்லி விடு
பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழின் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
17.09.2006
