நினைவெனும் ஆழியில்
நீந்திக் களைத்துப் பின்
கனவெனும் படகெடுத்து
கரையேறும் நேரமிது
உறவெனும் சங்கிலியால்
உணர்வுகளைப் பிணைத்து
உதிரத்தின் கொதிப்புகளை
உள்ளத்தினுள் அமுக்கி
பாசமென்னும் புதைகுழிக்குள்
புதைத்து வைத்த சோகங்கள்
மோசத்தின் விளைநிலமாய்
கோஷமிடும் இந் நேரங்கள்
சுமக்க முடியாச் சுமைகளை
சுமக்கின்ற இதயங்கள் அவை
சுரக்கின்ற ஞானத்தால் இன்று
சுந்தரத் தமிழ்க் கானங்கள்
வெடிக்கின்ற வேதனைகள் பல
எழுப்புகின்ற ஓலங்கள் ஏனோ
ஓசையின்றி வடிகின்ற விழி
ஓரத்தின் நீர்க்கோலங்கள்
வாழ்க்கையெனும் வயலிl
விளைவதெல்லாம் துன்பங்களெனில்
வாழ்ந்து விட்ட கணங்களில்
வாங்கி வந்த அனுபவங்கள்
புரியாத புதிராய் இங்கே
புலருகின்ற காலைகள் எல்லாம்
தெரியாத திசையினை நோக்கி
தேய்ந்துவிடும் மாலைகள் ஆகும்
பகிர்ந்திடத் துடிக்கும் சொற்கள்
பாதியிலேயே முடங்கிப் போக
உதிர்ந்திடத் துடிக்கும் கண்ணீர்
உள்ளுக்குள்ளே உறைந்து போகும்
வலிகளையே உரமாய் இட்டு
வாடுகின்ற மனதின் தோட்டம்
சலனமில்லாச் சிரிப்பினை மட்டும்
சகலருக்கும் தந்து பார்க்கும்
காலமெனும் சக்கரத் தடம்
காயங்களைச் செதுக்கிச் செல்ல
கோலமிடும் நினைவுகள் யாவும்
கவிதைவழி உயிர்ப்பைப் பெறும்
உன் நட்பின் நிழலில் மட்டும்
உலருகின்ற ஈரத் தழும்புகள்
மறுபடியும் வாழ்வதற்கு இங்கே
மனதுக்குத் தெம்பு தரும்!
சக்தி சக்திதாசன்
