Sunday, October 14, 2007

காலமகள் மடியில் கனவொன்று கண்டேன்

காலமகள் மடிதனிலே
கண்மூடிக் கொஞ்சம்
களைப்பாறும் போது
கண்டு வந்த கனவதன்
கதை கூறும் நேரம்

அந்தி மஞ்சள் மாலையில்
ஆடிவரும் தென்றலது
ஊஞ்சலாட்டும் மரக்கிளையில்
உட்கார்ந்த கிளியன்று
உருகுகின்ற நிலை கண்டேன்

காரணத்தை நானும் அப்போ
கனிவாக கிளியிடம் கேட்க
கண்நிறைந்த நீரோடு
கலங்கியந்த கிளியதுவும்
கதைபேசத் தொடங்கியதே

நேற்றுவரை நானும் கூட
நேசமிக்க குடும்பத்துடன்
பாசமாக வாழ்ந்திருந்தேன்
மோசமிக்க மனிதர்களின்
நாசமிகு காரியத்தால் .......

விம்மியது கிளி, பொங்கியது கண்ணீர்
சொட்டுகின்ற நீரகற்றி தொடர்ந்தது
இயற்கை தந்த வரமாக நிமிர்ந்ததொரு
இனியதொரு ஆலமரம் ... ஆமாம் எனது
இல்லறமும் அதில் தானே, நல்லறமாகியது

இருப்பதையெல்லாம் தனதாக்கி
இன்னும், இன்னும் வேண்டுமென
இதயத்தை கல்லாக்கிய மனிதன்
இயற்கை கொடுத்த கொடையை
இல்லையென்றாக்கினான் வாழ்வை

பச்சைக்கிளி உனக்கேன் இந்தப்
படுசோகம் வந்தது சொல் கிளியே !
பரமன் படைப்பினில்
படைத்தவை
பாரினில் அனைத்தும் சமனே
பகர்வாய் உன் துயரை ......

உன் இனத்தைச் சேர்ந்தவன் தான்
என் இனத்தை அழித்தான் கேளாய்
ஆலமரம் தன் வீட்டின் முன்னிருந்து
அழகைக் கெடுக்குது என்றே அவன்
அடியோடு அறுத்தான் அம்மரத்தை....

வாழ வழிதேடி வகையறியா வேளையில்
வதிய இடங் கொடுத்து ஆதரித்த
அன்பு ஆலமரம், அதில் தானே
அழகாய் நான் அமைத்த குடும்பம்
அன்பாய் வாழ்ந்திருந்தது

ஏன் மனிதா ? ஏனுங்கள் மனிதருக்கு
அளவற்ற ஆசைகள். இயற்கையின் வளத்தை
அழித்து, அழகு காணும் குறுகிய புத்திகள்
அறியமாட்டீரோ இவைதான் உங்கள்
அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதனை

விழுந்த மரத்தோடு மறைந்த சொந்தங்கள்
வதைக்கும் சோகங்கள் வழியும் நெஞ்சத்தில்
விதைத்த இன்பங்கள் புதைந்தே போயின
இன்றோடு நான் ஊமையாய் மாறினேன்
இனியொரு போதும் மனிதரே உம்மோடு பேசேன்

திடுக்கிட்டு விழித்தேன் ! என்னே பயங்கரம் !
எமைக்காக்கும் இயற்கையை நாமே அழிக்கின்றோம்
எத்தனை காலங்கள் எமையே ஏமாற்றுவோம்
என்னருமை மானிதர்காள் விழித்தெழுங்கள்
எப்போதும் காலமகள் மன்னிக்க மாட்டாள்.

1 comment:

Anonymous said...

பறவைகளின் கீச்சு கீச்சென்ற சத்தத்தில் அவைகள் மனிதனை சபிக்கும் வார்த்தைகளும் கூட அடங்கியிருக்கலாம்....

நல்ல கவிதை நண்பரே!